மனைவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொல்லை புகாரை ஏற்காமல் மிரட்டும் போலீசார்: காவலரின் வீடியோ வைரல்

சென்னை: கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் கார்த்திக். இவரது மனைவி செல்போனுக்கு தொடர்ந்து ராங்கால் மற்றும் ஆபாச எஸ்எம்எஸ் வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி புகார் அளிக்க கார்த்திக், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயம்பேடு காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருந்தும், இவரது புகாரை போலீசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் வீடியோ ஒன்றை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான், கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி செல்போனுக்கு ஒரு நபர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார். இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தால், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் எனது புகாரை ஏற்கவில்லை. மேலும், எனது மனைவிக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதாகவும், பொய் புகார் அளிப்பதாக என் மீது வழக்கு பதிவு செய்வோம், எனவும் போலீசார் மிரட்டுகின்றனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பணம் எதிர்பார்க்கிறார்களா?,  

நான் பணம் தரவும் தயாராக உள்ளேன். அப்போதாவது, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், எங்களது குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே, உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: