டெல்லி: மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையினர் சிறப்பாக பணியாற்றியிருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தாள் விழா கடந்த 2-ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மகாத்மா காந்தி கடந்த 1917ம் ஆண்டு உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி அன்று மாலை சென்றார்.
அங்கு அவர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். அங்குள்ள மியூசியத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாற்றினார். ஆசிரம வளாகத்தில் உள்ள காந்தி வசித்த வீட்டையும் அவர் பார்வையிட்டார். அதன்பின் சமர்பதி ஆற்றங்கரையில் நடந்த தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அங்கு 20 ஆயிரம் கிராமத் தலைர்கள் கூடியிருந்தனர். அதில், இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நாடாக பிரதமர் மோடி அறிவித்தார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தின் நினைவாக சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் 150 நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பிரபல இந்தி நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது என்றும், நமது நாட்டின் நலனுக்காக அது பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ChangeWithin என்ற ஹெஸ்டக்கில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். நடிகர் அமீர்கான் கூறுகையில், முதல் மற்றும் முக்கியமாக, இந்த முயற்சியைப் பற்றி சிந்தித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன். மகாத்மா காந்தியின் போதனைகளை பரப்ப எடுக்கும் நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். படைப்பாற்றல் நபர்களாகிய நாம் செய்யக்கூடியவை ஏராளம். மேலும், நாங்கள் இன்னும் அதிகமாக செய்வோம் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றார். நடிகர் ஷாருக்கான் கூறுகையில், எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், இந்தியாவுக்கும், உலகுக்கும் காந்தியை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தாம் நினைப்பதாக குறிப்பிட்டார்.