சென்னை: வறுமையிலும் படிப்பை தொடர வேண்டும் என்று ஆர்வம் காட்டிய மாணவிக்கு, கனடாவில் செயல்பட்டு வரும் அமைப்பில் இருந்து மேற்படிப்பை தொடர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரியாவுக்கு சிம்கா (காமன்வெல்த் எஜுகேஷனல் மீடியா சென்டர் பார் ஏசியா) விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எஸ்சி ஐடி படிப்பை அவர் தொடர உள்ளார்.
இதுதொடர்பாக, மாணவி பிரியா கூறியதாவது: நான் திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவள். விவசாய குடும்பத்தில் பிறந்ததால் வறுமை காரணமாக, பிளஸ்2க்கு பிறகு படிப்பை தொடர முடியவில்லை. கோவை கே.பி.ஆர் மில் நிறுவனத்தில் எங்கள் ஊருக்கு வந்து வேலைக்கு ஆள்தேர்வு செய்த போது, வேலை வழங்குவதோடு, படிக்க வைப்பதாக சொன்னார்கள்.