காதல் தோல்வியால் மாணவர் தற்கொலை: கருங்கலில் பரபரப்பு

கருங்கல்: கருங்கல் அருகே நர்சிங் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் மனம் உடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருங்கல் அருகே காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தனசாமி. இவருக்கு 2 மகள், ஒரு மகன் உண்டு. இவரது மகன் பபின் (19). களியக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். தன்னுடன் நர்சிங் படித்து வந்த கேரளாவை சேர்ந்த ஒரு மாணவியை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து தனது காதலை மாணவியிடம் கூறினார். பபினின் காதலை அந்த மாணவி ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பபின் மனம் உடைந்து காணப்பட்டார். விடுமுறை நாட்களில் பபின் அந்த பகுதியில் உள்ள ஒரு கோழிக்கடைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிட்டுகொண்டிருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

இதனால் அவருடன் இருந்தவர்கள் கேட்டனர். அப்போது விஷம் குடித்துவிட்டதாக கூறினார். உடனடியாக அவரை மீட்டு கருங்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பபின் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒருதலைக்காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டது கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: