அரியானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம்

அரியானா: அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள்,

கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குறிப்பிட்ட விவசாயிகளுக்கும், வீடுகளுக்கும் இலவச மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, 1 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் பட்டியல் இன மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை,போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவர் அரியானாவின் மஹேந்திரகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன், மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related Stories: