ராஜூவ்காந்தி கொலை குற்றவாளி ராபர்ட் பயாஸ் பரோல் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் பரோல் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில்  தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், 161வது சட்ட விதியின் கீழ் இந்த  விவகாரத்தில் அவர் இறுதி முடிவை எடுப்பார் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசும் ஆளுநருக்கு பரிந்துரை  செய்துள்ளது. இது தொடர்பாக இன்னும் அவர் முடிவு எடுக்காததால், ஆளுநர் அலுவலகத்தில் தமிழக அரசின் பரிந்துரை நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, 27 அண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பரோல் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் சிறைத்துறையின் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆனால் ராபர்ட் பயஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தான் முதன்முறையாக பரோல் கேட்பதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்பதால் அதை பரிசீலித்து உத்தரவிட  வேண்டுமென கோரிக்கை வைத்தார். பின்னர் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: