திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் குடியிருப்புகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, அதே வார்டில் உள்ள ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு மக்கும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் உரம் தயாரிப்பதற்காக ஆங்காங்கே குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் அழுகிய காய்கறி போன்றவைகளை வைத்து இருப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தரம் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி அங்கேயே போட்டு வைத்துள்ளனர். மேலும் தேங்காய் மட்டைகள் ஓடுகளையும் குவித்து வைத்துள்ளனர்.