சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு மீது பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல பழமையான கோயில்களில் இருந்து பல புராதன சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்த வழக்கை விசாரிக்க  ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது. மேலும், பொன்.மாணிக்கவேலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அவருக்கு தமிழக அரசு வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டுடன் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. பின்னர் இந்த சிறப்பு அமர்வை கலைத்து அப்போதைய தலைமை நீதிபதி தஹில் ரமானி உத்தரவிட்டார். இதனால், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த அவமதிப்பு வழக்கை எந்த அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: