பெரியகுளம்: சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணிரை தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவி திறந்து விட்டார். இந்த தண்ணீரால் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126 அடியாகும். கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது கடந்த சில நாட்களாக மழை இன்றி சோத்துப்பாறை அணையில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து வர துவங்கியது. அணைக்கு வரும் நீர்வரத்து 100 கன அடியாகவும், நீர் இருப்பு 100.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.