மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணை டிசம்பருக்குள் முடியும் என்று சிபிஐ தரப்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு காரணமான தமிழக உள்துறை செயலர், தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். பலியானவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். நீதிபதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுநல மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, 4 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விரைவாக விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.