நாகை: நாகை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேராததால் நேரடி விதைப்பு, நாற்றங்கால் பதித்த 750 ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடாததாலும் முப்போகம் சாகுபடி நடைபெறவில்லை.ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடிமராமத்து பணி, தூர்வாரும் பணி என்று பல்வேறு தடைகளை தாண்டி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் வந்தது. இதையொட்டி நாகை விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.