சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முன்னதாக மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று நின்று கிழக்குத் திசையில் இருந்து காற்றுவீசத் தொடங்கியுள்ளதால் வடகிழக்கு பருவமழை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.