பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மேம்பாலம் அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அங்குள்ள தொட்டியில் சேமிக்கப்பட்டு, பின்னர் கழிவுநீர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொட்டியில் இருந்து கழிவுநீரை முறையாக அகற்றாததால், அடிக்கடி தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி, ஜிஎஸ்டி சாலை வரை வழிந்து செல்லும். இந்த நிலையில் நேற்று காலையும் கழிவுநீர் தொட்டி நிறைந்து, அதிகளவு கழிவுநீர் ஜிஎஸ்டி சாலையில் வழிந்தோடியது. இந்த கழிவுநீர் அருகில் உள்ள கடை மற்றும் வீடுகளின் முன் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு முன் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.