சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 387.35 கி.மீ நீள பேருந்து வழிதட சாலைகள் உள்ளன. இதை தவிர்த்து 5,623 கி.மீ நீள உட்புற சாலைகள் உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து தட சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக, எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலை, போலீஸ் கமிஷனர் அலுவலக சாலை உள்ளிட்ட 26 பேருந்து வழித்தட சாலைகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 46 சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2018-19ம் ஆண்டு நிதியாண்டில் 74 கிலோ மீட்டர் நீளமுடைய சாலைகளில் 46 கோடி மதிப்பீட்டில் 31 நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதவிர வாகனம் சாரா போக்குவரத்து கொள்கையின்படி பல சாலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. தி.நகர் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள 96 கிலோ மீட்டர் பேருந்து வழித்தட சாலைகளை மேம்படுத்தவும், நடைபாதைகள் அமைக்கவும் 76 கோடியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.