புதுடெல்லி: தேங்கி கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண நீதித்துறையில் அமைப்பு ரீதியில் மத்திய அரசு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3.30 கோடி வழக்குகள் தேக்கமடைந்து கிடக்கின்றன. அதில் பல வழக்குகள் நீண்ட காலமாக தேக்கமடைந்து கிடப்பதால் மக்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். ஆதலால் தேக்கமடைந்து கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. இதற்காக நீதித்துறையில் அமைப்பு ரீதியில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு வழக்கு விசாரணை தாமதமடைவது, வழக்குகள் தேக்கமடைவதை தடுக்கும் வழிகளை கண்டறியும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.