விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அரசு வாகனத்தில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு : தேர்தல் ஆணையத்திடம் புகார்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சட்டவிதிகளை மீறி, அரசு வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தங்களது கட்சிக்கு வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் ஆளும்கட்சியாகவுள்ள அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிமுகவினர் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் விதிமுறையை மீறி, அரசு வாகனத்தில்  (TN 05 CG 9999) வாக்கு சேகரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகனத்தில் ஜி என்ற எழுத்து மட்டும் மறைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அரசு வாகனம் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குசேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறி, திமுக சட்டப்பிரிவு சார்பில் வக்கீல் கண்ணதாசன், முதன்மை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

Related Stories: