புனே: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவும் பிரசாரம் செய்யவிருக்கிறார்கள். பிரதமர் மோடி மொத்தம் 9 பொதுக்கூட்டங்களில் பேசவிருக்கிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், வரும் நாட்களில் பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களிலும் அமித் ஷா 18 பொதுக்கூட்டங்களிலும் பேசவிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசவிருக்கிறார். அவற்றில் இரண்டு பொதுக்கூட்டங்கள் அக்டோபர் 17ம் தேதி சத்தாரா மற்றும் புனேயில் நடைபெறும். அமித் ஷா பங்கேற்கும் கூட்டங்களில் பெரும்பாலானவை மேற்கு மகாராஷ்டிரா பிராந்தியத்தில் நடைபெறும்.