மத்திய அரசின் ''ராஷ்டிர அவிஷ்கார் அபியான்''திட்டத்தின் கீழ் தமிழக பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லலாம்: பள்ளிக்கல்வி இயக்ககம்

சென்னை: மத்திய அரசின் ராஷ்டிர அவிஷ்கார் அபியான் திட்டத்தின் கீழ் தமிழக பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 560 பேரை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 960 பேரையும் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 3 ஆயிரத்து 600 பேரையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், மைசூர், திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு பல கட்டமாக மாணவர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

அதற்காக 72 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஒதுக்கியுள்ளது. IRCTC உடன் இணைந்து, ரயில் மற்றும் பேருந்து மூலம் ஆசிரியர்கள், ஆசிரியைகளுடன் மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், பெற்றோரின் உரிய அனுமதி பெற்ற பின்பே மாணவ, மாணவியரை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் கல்விச்சுற்றுலா விவரங்கள், புகைப்படங்கள்,வீடியோக்களை பயணம் முடிந்த உடன், தொகுப்பு அறிக்கையாக தயாரித்து இயக்குநரகத்துக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: