தஞ்சை: த தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழன் 35 ஆண்டுகள் மன்னராக ஆட்சி புரிந்தார். அவரது 20வது ஆண்டில் பெரியகோயிலை கட்டினார். ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியரால் 29-வது ஆட்சியாண்டின்போது இக்கோயிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய இரண்டு ஐம்பொன்னாலான சிவன் சிலைகளை கோயிலுக்கு வழங்கினார். இந்த இரு சிலைகளும் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை சிறப்பு அதிகாரி ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை தஞ்சாவூர் கலைக்கூடத்துக்கு வந்தனர். சுமார் மூன்று மணி நேரம் ஆய்வு செய்த பின் அங்கிருந்த காப்பாட்சியர் சிவக்குமாரிடம், இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சொந்தமானவை, தெய்வ திருமேனிகள் பூஜிக்கப்பட்டு வணங்கக்கூடியவை, அருங்காட்சியத்தில் வைக்ககூடாது எனவும், இந்த சிலைகள் காணாமல் போனது தொடர்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2.3.2018ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.