சென்னை: இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 - 2019ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவிகித இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்வி கட்டணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இணைந்து செலுத்தப்படும். இந்நிலையில் கடந்த 2018 - 2019ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 64 ஆயிரத்து 385 பேருக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.