திருப்பதி பிரம்மோற்சவம் : 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் உற்சவர் மலையப்பசுவாமி வீதி உலா; கோவிந்தா கோவிந்தா முழக்கம் விண்ணதிர பக்தர்கள் தரிசனம்

திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 5வது நாளான நேற்றிரவு முக்கிய வாகன சேவையான கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

கருடசேவைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்கள் சுவாமியின் அவதாரங்கள், லீலைகள் குறித்த கலைநிகழ்ச்சிகளை மாடவீதிகளில் வரிசையாக செய்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதியில் வலம் வந்தார். அப்போது சுவாமி வேடமணிந்து ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

இதையடுத்து தற்போது 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தயார்களுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாடவீதியில் வலம் வரும் வைபவம் நடைபெற்று உள்ளது. தங்கத் தேரில் உலா வந்த சுவாமியை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.இரவு கஜ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Related Stories: