திருமலை: திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. இதையொட்டி, பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம் என பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) மாய மோகத்தை போக்கும் விதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாச்சியார் திருக்கோலத்தில் உள்ள தனது உருவத்தை (மகாவிஷ்ணு) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் கிருஷ்ணரும் வீதிஉலா வந்தார்.