ராமேஸ்வரம்: இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவு உள்ள இந்த பகுதியில் 21 தீவு கூட்டங்கள் உள்ளன. கடல்வாழ் பல்லுயிர் உயிர் கோலமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. இந்த பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல்பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் வளைகுடாவில் தற்போதைய கடல்வாழ் உயிரியல் வளம் குறித்து விரிவான ஆய்வு நடத்திட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் திட்டமிட்டது.