குலசேகரம் : குமரி மாவட்ட வன பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் காடுகள். அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளதால் இங்குள்ள காடுகளில் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் அதிகம் உள்ளன. பல அரிய மூலிகைகளும் காணப்படுகின்றன.2016 நவம்பரில் வீசிய ஓகி புயலில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வன பகுதி முற்றிலும் நாசமானது. அவற்றை வெட்டி அகற்றும் பணி முழுமையாக நடைபெறவில்லை. குறிப்பாக குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி, செல்லந்திருத்தி, காயல்கரை பகுதிகள் அடர்ந்த காட்டு பகுதி. மக்கள் நடமாட்டம் இல்லாததால், வனத்துறையினரும் அதிகளவில் செல்வது இல்லை. இந்த பகுதிகளில் ஓகி புயலில் தேக்கு, ஈட்டி போன்ற விலை மதிப்பு மிக்க, நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் முறிந்து கிடந்தன. வனத்துறை இதை கண்டு கொள்ளாததால், கடத்தல் கும்பலின் பார்வை இந்த மரங்கள் மீது விழுந்தது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வட மாநில கும்பல் இந்த பகுதிக்குள் நுழைந்து முறிந்து விழுந்த மரங்களை மட்டுமில்லாமல் காடுகளில் உள்ள மற்ற மரங்களையும் வேட்டையாட தொடங்கினர். நவீன மர அறுவை இயந்திரம் மூலம் மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அவற்றை லாரிகளிலும், டெம்போக்களிலும் கடத்தினர். நள்ளிரவில் இவை கடத்தி கொண்டு செல்லப்பட்டன.