சென்னை: தந்தை இறந்த நிலையில் குடும்ப சூழ்நிலை கருதி அவரது பணியை திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பென்னாடத்தை சேர்ந்த சித்ரா தேவி. முதுகலை பட்டதாரியான இவரது தந்தை அந்தோணி. கடலூர் மாவட்டம் பென்னாடத்தில் உள்ள மல்லிகைகோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இரவு வாட்ச்மேனாக கடந்த 1986லிருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2011 நவம்பரில் மரணமடைந்தார். இந்நிலையில், தனது தந்தை பணியாற்றி கூட்டுறவு வங்கியில் தனக்கு ஏதாவது ஒரு பணி வழங்குமாறு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சித்ராதேவி மனுத்தாக்கல் ெசய்தார். மனுவில், தந்தை இறந்தபிறகு தாய் வருமானம் எதுவும் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக 2003ல் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள். கணவருக்கும் நிலையான வேலை இல்லை. எனவே, எனக்கு என் தந்தை பணியாற்றிய கூட்டுறவு வங்கியில் கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் மனு கொடுத்தேன். எனது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனக்கு கருணை அடிப்படையில் மல்லிகைகோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.