முதல் டெஸ்ட் போட்டி; ரோகித், அகர்வால் அசத்தல்; மழையால் பாதியிலேயே முடிந்த முதல்நாள் ஆட்டம்

விசாகபட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் இன்று முதல்  டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால்  ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மாவும், மயங்க் அகர்வாலுக்கும் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி வீசியும் இருவரையும் நகர்த்த முடியாமல் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் திணறினர். ரோகித்சர்மா அதிரடியாக ஆடி 154 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

அவர் 174 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மற்றொருபுறம் மயங்க் அகர்வால் பொறுமையாக விளையாடி 183 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். இந்நிலையில் 59.1 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே முடிந்தது. ரோஹித் சர்மா சதம் அடித்து தன்னை டெஸ்ட் போட்டிக்கு தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

Related Stories: