புதுடெல்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் சோதனை முயற்சியாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய அரசு ஐஆர்சிடிசியிடம் ஒப்படைத்துள்ளது. தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த முதல் ரயில் வருகிற 4ம் தேதி முதல் இயங்குகின்றது. இந்நிலையில் பொதுமக்களிடையே தேஜஸ் ரயிலில் பயணிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பயணிகளை கவரும் வகையிலும் ஐஆர்சிடிசி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இதன்படி, ரயிலில் பயணம் செய்வோருக்கு ரூ.25 லட்சத்துக்கு இலவச இன்சுரன்ஸ் செய்து தரப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பயணிகள் தேஜஸ் ரயிலில் பயணிக்கும்போது அவர்களது வீடுகளில் திருட்டு நடந்தால் ரூ.1லட்சம் வழங்கப்படும் என்பதும் அடங்கும்.