சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டது. 35 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதியில் போட்டியிட ஒரு பெண் உள்பட மொத்தம் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி நாங்குநேரி தொகுதியில் 46 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் 28 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.வேட்புமனு செய்தவர்களின் மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் மனு தாக்கல் செய்த நா.புகழேந்தி, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த முத்தமிழ் செல்வன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 15 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 13 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.