செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நாகபாடி கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்கள் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கல்லூரிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் தினமும் பயணம் செய்கின்றனர்.