சென்னை: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர்கள், தற்போது கல்குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக மாறிவிட்டனர். போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் கனிமவளத்துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வெளியிடுவேன் என லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறினார். காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் கிரஷர் உரிமையாளர்களிடம், பணம் செலுத்தி ஜிஎஸ்டி ரசீதுடன் லாரிகளில் ஜல்லி ஏற்றி வருகிறோம். ஆனால் லாரிகளை மடக்கும் போலீசார், இடமாற்று சான்றிதழ் இல்லைஎன முறைகேடாக வழக்குப்பதிவு செய்கின்றனர். அரசு அனுமதி என்ற பெயரில் விதிமுறைகளுக்கு முரணாக, முறைகேடாக செயல்படும் கிரஷர் உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கனிமவள கொள்ளை மற்றும் முறைகேடான ரசீது குறித்தும் ஊதுபத்தி புகை மற்றும் லைட்டர் காண்பித்தால் ரசீதில் உள்ள எழுத்துக்கள் அழிவது போன்ற ஊழல்கள் குறித்து, ஆளுநர், தமிழக முதல்வர், கனிமவள உயர் அலுவலர்கள் என அனைவருக்கும் மனு வழங்கினோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .