திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: இரவு பெரிய சேஷ வாகனத்தில் வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், வருடாந்திர பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 9 நாட்கள் நடக்கும் பிரமோற்சவத்தில் இன்று முதல் ஏழுமலையான் சுவாமி மாட வீதிகளையும் சுற்றி வந்து அருள் பாலிக்க உள்ளார். முதல் நாளான இன்றிரவு சுவாமி பெரியசேஷ வாகனத்தில் வீதியுலா வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.

சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்தார். இந்நிலையில் இன்று மாலை தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமியுடன், கருடன் உருவம் வரையப்பட்ட கொடி நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. பின்னர் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள்  தங்க கொடிமரத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். இதைதொடர்ந்து ஆந்திர மாநில அரசின் சார்பில் பட்டு வஸ்திரங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சுவாமிக்கு சமர்ப்பிக்க உள்ளார்.

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும், அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் (ஆதிசேஷன்) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கும். நாளை காலை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி பவனி நடைபெறும்.

Related Stories: