சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. தமிழக அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி காலை வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீரை திறந்து விட்டது. மறுநாள் மாலை 2000 கனஅடியாகவும் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கண்டலேறுவில் இருந்து 152 கி.மீ. கடந்து நேற்று காலை 10.30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.