நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யாவுக்கு பின்னர் ஒரு மாணவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 இடைத்தரகர்கள் கைது

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மேலும் 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் 4 மாணவர்கள், 2 இடைத்தரகர்களிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா ஆவார். இவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவரம் வெளியானது. இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், உதித்சூர்யா மீது க.விலக்கு போலீசார் கடந்த 18-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். உதித்சூர்யா தனது குடும்பத்துடன் தலைமறைவானதால் அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் உதித்சூர்யாவை குடும்பத்துடன் தனிப்படையினர் மடக்கிப் பிடித்து தேனிக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து உதித்சூர்யாவை நேற்று முன்தினம் கைது செய்தார். உதித்சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் கமிஷன் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார். இதனால் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முதல் மாணவர் சேர்க்கை வரை பல்வேறு கட்டங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையில் நேற்று ஒரு மாணவி உள்பட 3 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களில் ஒருவர் பெயர் பிரவீண். இவர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார். மற்றொரு மாணவரின் பெயர் ராகுல். இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். பிடிபட்ட மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி ஆவார். இவர்கள் மூவரும் சென் னையைச் சேர்ந்தவர்கள். பிடிபட்ட 3 பேரையும், நேற்று இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். மேலும் காஞ்சிபுரம் தனியார் கல்லூரிகளில் படித்துவந்த 3 மாணவர்களின் தந்தைகள் மாதவன், சரவணன், டேவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணைக்காக தேனி அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக மேலும் 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுளனர். மேலும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 4 மாணவர்கள், 2 இடைத்தரகர்களிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: