திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்ட விமானம் ரன்வேயில் சென்றபோது திடீர் கோளாறு ஏற்பட்டது. இதில் 174 பயிகள் உயிர் தப்பினர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் தினந்தோறும் இரவு 10.35 மணிக்கு திருச்சி வருகிறது. பின்னர் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு ரன்வேயில் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்து விமானத்தை உயரே ஏற்றாமல் ரன்வேயில் நிறுத்தினார்.
அப்போது தொழில்நுட்ப கோளாறு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் அந்த விமானம், நிலையத்தில் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் பயணிகள் விமானத்தில் அமர்ந்தபடி இருந்தனர். தொழில்நுட்ப கோளாற்றை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். தனியார் விடுதியில் 138 பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் தங்களது, தேதிகளை மாற்றியும், விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். மீண்டும் இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு 138 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி நேற்று மாலை 5 மணி அளவில் புறப்பட்டு மலேசியாவுக்கு சென்றது.