சென்னை: தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர முடியுமே தவிர பொதுநல வழக்குதொடர முடியாது என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொமதேக சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 4 பேரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளுக்கு முரணானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.