விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.45 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பருத்தி, பட்டுச் சேலைகள், வெண்பட்டு சேலைகள், உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ரசாயன உரங்களின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவைகள், கண்டாங்கி சேலைகள், படுக்கை விடுப்புகள், நவீன ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சுடிதார், என அனைத்து வித ஆடைகள் விற்பனைக்கு உள்ளது.