சென்னை: தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது வாழ்நாள் இறுதி வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார் என ஸ்டாலின் தெரிவித்தார். அதனால் தான், தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மனக்குகையில் சிறுத்தையில் எழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் என தந்தை பெரியாருக்கு புகழாரம் சூட்டினார் பாவேந்தர் என தெரிவித்தார். பகுத்தறிவு பகலவன் என்று தமிழர்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.