திருமங்கலம் சுடுகாட்டில் பதுங்கியிருந்த ஆசாமிகள் சுற்றி வளைப்பு: வியாபாரியிடம் கொள்ளையடிக்க சதித்திட்டம்

அண்ணாநகர்: வியாபாரியிடம் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டுவதற்காக சுடுகாட்டில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.   சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒரு கும்பல் மதுபோதையில் குத்தாட்டம் போடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதுதொடர்பாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதன் அடிப்படையில், திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் சென்று சுடுகாடு பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.  

அப்போது சுடுகாட்டில் 3 பேர் குடிபோதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த 3 பேரையும் சுற்றிவளைத்தபோது தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், திருமங்கலம் பாடிகுப்பம் ரோட்டை சேர்ந்த தாமு(எ) தாமோதரன் (29), பாலாஜி (22), அஜித் (22) என தெரியவந்தது.

மேலும் இவர்கள் கோயம்பேடு மார்க்கெட் அருகே வியாபாரியை வழி மடக்கி கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் தாமு மீது திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: