ஜீவசமாதி அடைவதாக பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்து நாடகம் ஆடிய சாமியார் மீது வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அருகே ஜீவசமாதி அடைவதாக கூறி உண்டியல் வசூலித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையை அடுத்த பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி ஆவார். இவருக்கு இருளாயி என்ற மனைவியும், கண்ணாயிரம் என்ற மகனும், பூச்சி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருளப்பசாமி பாசாங்கரையில் ஜீவசமாதி அடையப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் ஏராளமான ஆண்களும், பெண்களும் பாசாங்கரைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி சாமியார் இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதற்காக தேர்வு செய்த இடத்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். அவரை காண்பதற்காக ஏராளமானவர்கள் அங்கு வந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார், “இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிக்குள் தன்னுடைய உயிர் பிரிந்து விடும்” என்று கூறினார். இதையடுத்து 6½ அடி ஆழத்தில், அங்கு குழி தோண்டப்பட்டது. மேலும் இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்தனர். அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அவரைக் காண வந்த பொதுமக்களுக்கு உணவு தயாரித்தும் வழங்கப்பட்டது.

இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதாக அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழுவினர் உள்ளிட்டோர்  அந்த இடத்தில் தங்கியிருந்து கண்காணித்தனர்.  ஆனால், காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி அடையும் முடிவை திடீரென இருளப்பசாமி ஒத்திவைத்தார். சமாதி கட்டும் பணிகள் நிறைவடையவில்லை என்பதால் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உண்டியல் வசூலிக்கும் நோக்கத்தில் இவ்வாறு செயல்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சாமியார் இருளப்பசாமி மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாமியார் இருளப்பசாமி உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: