திருப்புவனம்: திருப்புவனம் அருகே மாயமான கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு, ஆற்றில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 நாட்களுக்குப் பின் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குருந்தங்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் திருப்புவனம் கோட்டையில் உள்ள செட்டிய தெருவில் மனைவி இந்திரா, மகன் அஜீத்குமார்( 19) ஆகியோருடன் வசித்து வந்தார். திருச்சியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அஜீத்குமார் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 2 மாதங்களாக அஜீத்குமார் கல்லூரிக்கு செல்லாததால், அவருக்கு மருத்துவச்சான்றிதழ் வாங்குவதற்காக செப்.4ம் ேததி மகனுடன் பழைய சந்தை திடலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுப்பிரமணி சென்றார். சான்றிதழ் வாங்கிய பின்பு அஜீத்குமார் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து தனது மகனை காணவில்லையென திருப்புவனம் போலீசில் கடந்த 9ம் தேதி சுப்பிரமணி புகார் செய்தார். மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐக்கள் மாரிக்கண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு அஜீத்குமாரை தேடி வந்தனர்.