விபத்துக்களை குறைக்க, போக்குவரத்தை மேம்படுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆஸ்திரேலியா பயணம்

சென்னை: விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்தை மேம்படுத்துவதை தெரிந்து கொள்வதற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. அதேநேரத்தில் நாடு முழுவதும் சாலை விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களில் சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் தமிழகத்தில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் விபத்துக்களை குறைக்க சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதனால் விபத்துக்கள் குறைக்கப்பட்டன.

அதேநேரத்தில் மாநில அளவில் போக்குவரத்து கமிஷனர் சமயமூர்த்தி தலைமையில் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதனால் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளன. இதற்கிடையில் தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்தவும், விபத்துக்களை குறைக்கவும், விபத்துகள் நடந்தால் காயம்பட்டவர்களை மீட்பது குறித்து ஆஸ்திரேலியாவில் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பல்வேறு துறைகளில் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

அதில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ், சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், சாலைத்துறை இயக்குநர் அருண் தம்புராஜ், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் ஜெயந்தி ரங்கராஜன், நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் கீதா, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும தலைமை திட்டமிடல் அதிகாரி பொன் செந்தில்நாதன் ஆகியோர் நேற்று இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா ஸ்டேட் என்ற மாநிலத்துக்கு சென்றனர். உலகிலேயே அங்குதான் சாலை போக்குவரத்து திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து அங்கு உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா ஸ்டேட் என்ற மாநிலத்தில்தான் உலகிலேயே சாலை போக்குவரத்து திறம்பட செயல்படுத்தப்படுகிறது.

Related Stories: