சென்னை: பல்வேறு இடங்களில் உள்ள மின்தடை சேவை மையங்களில், போதுமான ஆட்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நுகர்வோர் 1912 எண்ணில், தொடர்பு கொண்டு, மின் தடை குறித்து, புகார் செய்யலாம்.
இதுதவிர புதிய மின் இணைப்பு தாமதம், மீட்டர் பழுது, மின் விபத்து போன்ற அனைத்து விதமான புகார்களையும் தெரிவிக்கலாம். பல இடங்களில், இந்த மையத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை எனக்கூறப்படுகிறது. ஒருசில மையங்களில் கட்டடம் அமைக்கப்பட்டும், அதற்கான உபகரணங்கள் பொருத்தப்படாலும், பணியாளர்கள் நியமிக்கப்படாமலும் உள்ளனர். இதனால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் பல முக்கிய நகரங்களில், கணினி மின் தடை நீக்கும் மையங்களை அமைக்கம் பணியும் மந்தகதியில் நடந்து வருகிறது.இது குறித்து தொமுச நிர்வாகி சரவணன் கூறியதாவது: மின்நுகர்வோர்கள், தங்கள் மாதாந்திர மின் கட்டணம், புகார் மனுவின் தற்போதைய நிலை, புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகளை தெரிந்து கொள்ளவும், புகார்கள் தெரிவிக்கவும் 2009ம் ஆண்டு, வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கப்பட்டது. ஆனால் தற்போது மின்தடை புகார் மற்றும் பிற புகார்களை தெரிவிக்க 1912 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.