வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்சென்ற நீரவ் மோடியின் சகோதரர் நேஹலுக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்

புதுடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நீரவ் மோடியின் சகோதரர் நேஹலுக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றி திரிவது தெரிய வந்தது.

இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி அவர் பலமுறை தாக்கல் செய்த மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நீரவ் மோடியின் சகோதரர் நேகலுக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் பெல்ஜீயம் நாட்டின் குடியுரிமை பெற்ற நேகல் நீரவ் மோடி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதாக புகார் எழுந்தது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை நேகல் அழித்துவிடும் வாய்ப்புள்ளதால் அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை கோரியிருந்தது. அதன் கோரிக்கையை ஏற்று நேகலுக்கு இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Related Stories: