ஆவடி: ஆவடி அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, தினமும் அதிகளவில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு, அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நடந்து செல்லும் பெண்களிடம் தகராறு, சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிமகன்கள் அரைகுறை ஆடைகளுடன் அப்பகுதியில் நடனமாடி செல்கின்றனர். இதனால், பெண்கள் வெட்கப்பட்டு தலைகுனிந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் மது அருந்திவிட்டு, காலி பாட்டிலை சாலையில் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால், சாலையில் ஆங்காங்கே உடைந்த பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களை இவை பதம் பார்ப்பதால் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இந்த 3 டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி நீதி மன்றங்களையும் நாடியுள்ளனர். இருந்தபோதிலும் கடைகள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் அதனை மூடுவதற்கும், டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.