சென்னை: மயிலாப்பூரில் துர்கை அம்மன் கோயிலில் 15 கிலோ எடை கொண்ட ஐம்பொன் கிருஷ்ணர் சிலையை திருடிய குற்றவாளிகள் சிசிடிவி பதிவில் சிக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில் சலவை தொழிலாளர்களுக்கு என தனியாக 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த துர்கையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட 15 கிலோ எடையுள்ள 1 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற ராகு கால விளக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்த பிறகு ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலை மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி சங்கர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.