சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் திருக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பாக 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கடந்த 1982ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால் திருடப்பட்ட நடராஜர் சிலையை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைதொடர்ந்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோயிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் ஆஸ்திரேலியா அரசுக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.