சென்னை: மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், மின்சார கட்டணம் இப்போதைக்கு உயர்த்தப்படாது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகமே நிதிநெருக்கடியில் தள்ளாடி வருவதை புள்ளி விவரங்கள் கோடிட்டு காட்டி வருகின்றன. அதுபோல தமிழக மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தது உட்பட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. எனவே அதனை மீட்டெடுப்பதற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்தவும், மின்சார கட்டணத்தை உயர்த்தவும் மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.