ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசிய நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த சில நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். காற்றின் வேகம் கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த 6ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து திரும்பினர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தங்களது படகுகளை வழி மறித்து, மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.