இந்தியாவிலேயே 2வது தூய்மையான சிறந்த புனித்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு: விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு!

மதுரை: சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்காக 2வது இடத்தை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை மாநகராட்சியுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுவட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு கடந்த வாரத்தில் ஜல்சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியிருந்தது. அதில் தூய்மை பராமரிப்புகளுக்கு 2வது இடமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.

குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25-e கழிவறைகள், குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்ட்டுள்ள குப்பை தொட்டிகள், நெகிழி பைகளுக்கு தடை விதிப்பு, சுழற்சி முறையில் சுகாதார பணியாளர்கள் நியமனம், நவீன மண்கூட்டும் எந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் எந்திரம் அமைத்தல், பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: