சென்னை: மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியில் மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து திருமால் பாதாள உலகிற்கு தள்ளினார். இதை அடுத்து பாதாள உலகிற்கு செல்லும் முன்பு ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார் எனும் புராண கதை உள்ளது.